வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் பறிப்பு

வீடு புகுந்து கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் பறிப்பு
Updated on
1 min read

வீடுகளில் புகுந்து கத்திமுனையில் மிரட்டி 20 பவுன் நகை, ரூ.24 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற முகமூடிக் கொள்ளையர்களை நாமக்கல் போலீஸார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் அடுத்த ஓட்டக்கல்புதூரைச் சேர்ந்த விவசாயி சின்னசாமி (68). இவர் நேற்று முன்தினம் மனைவி ராஜலட்சுமி (58), மருமகள் சுபாஷினி (22) ஆகியோருடன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த 4 மர்ம நபர்கள், சின்னசாமியைக் கட்டிப்போட்டனர்.

தொடர்ந்து கத்தி முனையில் மிரட்டி ராஜலட்சுமி, சுபாஷினி ஆகியோர் அணிந்திருந்த தாலிக்கொடி, தோடு என 11 பவுன் நகையை பறித்தனர். மேலும், ரூ.4 ஆயிரம் ரொக்கம் ஆகிய வற்றையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பினர். 4 பேரும் முகமூடி அணிந்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை என, போலீஸிடம் சின்னசாமி தெரிவித்தார்.

இதேபோல் வீசாணத்தைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதி ரவிக்குமார் (29) என்பவர் வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்மநபர்கள் அவரையும், அவரது மனைவியையும் கத்தி முனையில் மிரட்டி தாலிக்கொடி, தோடு என 9 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பினர். நாமக்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான முகமூடிக் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in