Published : 14 Jan 2021 03:21 AM
Last Updated : 14 Jan 2021 03:21 AM

ஆங்கிலம், இந்தியில் மட்டும் அஞ்சல் துறை தேர்வு நடத்துவதா? அறிவிப்பை ரத்து செய்ய டி.ஆர்.பாலு கடிதம்

திமுக பொருளாளரும் அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு மத்திய அஞ்சல் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

இந்திய அஞ்சல் துறையின் தமிழக பிரிவுக்கு கணக்காளர்களை தேர்வு செய்ய சென்னை மண்டல தலைமை அஞ்சல் துறை அதிகாரியால் ஜனவரி 4-ம் தேதி பொது அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில், வரும் பிப்ரவரி 14-ம் தேதி நடைபெறும் தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி மொழி வாயிலாக மட்டுமே நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஜுலையில் நடைபெறவிருந்த நான்காம் நிலை பணியாளர்களுக்கான அஞ்சல் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதை தமிழகமக்கள் சுட்டிக்காட்டி எதிர்ப்பு தெரிவித்தபோது, நடந்துவிட்ட தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ஆங்கிலம், இந்தியில் நடைபெறவிருந்த தேர்வுகள் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அஞ்சல் துறைஅமைச்சரான தாங்கள் அறிவித்தீர்கள்.

திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல வழக்கின் போது, "தமிழ் மொழி உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும்" என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. நாடாளுமன்றம், நீதிமன்றத்தில் மத்திய அரசுஅளித்த உறுதிமொழி மீறப்பட்டுள்ளது.

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகளில் தமிழ் மொழி பயின்றதமிழக இளைஞர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது அநீதி மட்டுமல்ல, கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானதாகும். என இந்த அறிவிப்பாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x