Published : 14 Jan 2021 03:22 AM
Last Updated : 14 Jan 2021 03:22 AM

வகுரம்பட்டி ஊராட்சியில் பொங்கல் சுற்றுலா விழா

நாமக்கல் அருகே வகுரம்பட்டி ஊராட்சியில் சுற்றுலாத்துறை மற்றும் வகுரம்பட்டி ஊராட்சி சார்பில் பொங்கல் சுற்றுலா விழா நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். தொடர்ந்து வகுரம்பட்டியைச் சேர்ந்த பெண்கள் அங்குள்ள கோயில் மைதானத்தில் புதுப்பானைகளில் பொங்கல் வைத்தனர்.

இதையடுத்து தருமபுரி ஸ்டாலின் ராஜா தலைமையிலான பாரதி கிராமிய கலைக்குழுவினரின் கரகம், காவடியாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், புலி ஆட்டம் உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மேலும், பரதநாட்டியம், பானை உடைத்தல், சாக்கு ஓட்டம், கோலப்போட்டி, கயிறு இழுத்தல், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், கல்லாங்கல், தாயம், இசை நாற்காலி போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வகுரம்பட்டியைச் சேர்ந்த இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் சிறுவர், சிறுமியர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட சுற்றுலா அலுவலர் த.சக்திவேல், ராஜா ரகுமான், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.தேன்மொழி, அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x