Published : 13 Jan 2021 03:14 AM
Last Updated : 13 Jan 2021 03:14 AM

பொங்கலுக்கு புத்தாடை வாங்குவதற்காக ஜவுளிக் கடைகளில் அலைமோதிய கூட்டம் சென்னை, புறநகர் பகுதிகளில் பரபரப்பான விற்பனை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வாங்குவதற்காக ஏராளமானோர் குடும்பத்துடன் திரண்டதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜவுளிக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில வாரங்களாகவே ஜவுளிக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. போகி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், பல கடைகள், வணிக வளாகங்களில் நேற்று கூட்டம் அலைமோதியது. சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பல்வேறு துணிக்கடைகளிலும் நேற்று காலை 10 மணி முதலே ஏராளமானோர் குடும்பத்துடன் வரத் தொடங்கினர். கடைகளின் நுழைவுவாயில்களில் வாடிக்கையாளர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது.

பாண்டிபஜார், வடக்கு, தெற்கு உஸ்மான் சாலையில் நேற்று மாலை திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். கண்காணிப்பு கோபுரங்கள், ட்ரோன் கேமராக்கள் மூலமாகவும் போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர்.

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு காவல் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் ஒலிபெருக்கி வழியாக தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.

புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, போரூர், வேளச்சேரி, குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட இடங்களிலும் பஜார் பகுதிகளில் துணிமணிகள் வாங்க ஏராளமானோர் குடும்பத்துடன் வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x