Published : 13 Jan 2021 03:15 AM
Last Updated : 13 Jan 2021 03:15 AM

பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கக் கோரி சிஐடியு சார்பில் பொங்கல் வைக்கும் போராட்டம்

திருச்சி/ பெரம்பலூர்

நல வாரியம் மூலம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திருச்சியில் நேற்று பொங்கல் வைக்கும் போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு ஆட்டோ ரிக் ஷா ஓட்டுநர் சங்கம் சார்பில் மன்னார்புரத்தில் உள்ள நல வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.சந்திரன் தலைமை வகித்தார்.

சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ரங்கராஜன், துணைத் தலைவர் ஜெ.ஜெயபால், ஆட்டோ சங்க மாவட்டப் பொதுச் செயலாளர் எஸ்.மணிகண்டன், மாவட்டப் பொருளாளர் கே.அன்புச்செல்வம், மாவட்ட அமைப்புச் செயலாளர் வி.சரவணன் மற்றும் ஏஎல்.பக்ருதீன் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நல வாரியம் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்குவதுபோல, ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, நல வாரிய அலுவலகம் முன் பொங்கல் வைக்கப்பட்டது. மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர், தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பின்புறம் உள்ள மாவட்ட தொழிலாளர் நல அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அனைத்து வகையான ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செய லாளர் எஸ்.அகஸ்டின் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், கோரிக்கை மனுவை தொழிலாளர் நல உதவி ஆணையரிடம் வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x