Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM
சர்க்கரை நோயால் இரு கால்களையும் இழந்தவருக்கு கோவை அரசு மருத்துவமனையில் எடை குறைந்த செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சம் மதிப்பில், எடை குறைந்த செயற்கை உறுப்புகள் தயாரிக்கும் மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன்மூலம், முட நீக்கியல், விபத்து சிகிச்சை துறை இயக்குநர் வெற்றிவேல் செழியன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், சர்க்கரை நோயால் இரு கால்களையும் இழந்த, சோமனூரைச் சேர்ந்த சின்னசாமிக்கு (49) எடை குறைந்த செயற்கைக் கால்களை வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.
மருத்துவர் வெற்றிவேல் செழியன் கூறும்போது, “சாலை விபத்து மற்றும் சர்க்கரை நோயால் மாதந்தோறும் 10-க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு கோவை அரசு மருத்துவமனையில் கை, கால்களை அகற்ற வேண்டிய நிலை உள்ளது. வெளியில் செயற்கைக் கால் பொருத்தினால் ரூ.2 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆதார் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை எடுத்துவந்தால் போதுமானது.
காலை அகற்றிய பிறகு ஏற்படும் புண், வீக்கம் ஆகியவை முழுமையாக குறைந்த பின்பே, செயற்கை கால் பொருத்த முடியும். எனவே, இதற்காக பிரத்தியேகமாக 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. செயற்கை உறுப்புகளைப் பொருத்திய பிறகு, யார் துணையும் இல்லாமல் தானாக நடக்கும் அளவுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதுவரை இங்கு 15 பேருக்கு வெற்றிகரமாக செயற்கை கை, கால்களைப் பொருத்தியுள்ளோம்" என்றார்.
அரசு மருத்துவமனையில் முதல்முறையாக ஒருவருக்கு இரு செயற்கை கால்களைப் பொருத்திய மருத்துவர்களுக்கு டீன் காளிதாஸ் பாராட்டுத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT