Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM

பாஜகவினர் மீது தாக்குதல்: எஸ்டிபிஐ பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது புகார்

மதுரை: மதுரையில் பா.ஜ.க.வினரின் வாகனங்கள் மீது கல் வீசியது தொடர்பாக எஸ்டிபிஐ, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் புறநகர் மாவட்ட பாஜக அலுவலகம் தாக்கப்பட்ட புகாரில் 2 பேரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

மாநகர் மாவட்ட பாஜக துணைத் தலைவர் ஹரிகரசுதன், தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனு:

திருப்பாலை மந்தைத் திடலில் புறநகர் மாவட்ட பாஜக சார்பில், பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் கலந்து கொள்ளக் கட்சியினருடன் காரில் சென்றேன். மந்தைத் திடலுக்கு செல்லும் வழியில் பள்ளி வாசல் அருகில் உள்ள சாவடி தெருவில் சென்றபோது, எஸ்டிபிஐ கட்சியின் கிளைச் செயலர் திலக் சிக்கந்தர் தலைமையில் அக்கட்சியினரும், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சியைச் சேர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோரும் உருட்டுக் கட்டைகளுடன் வந்து எனது காரை வழிமறித்து, கற்களை வீசிச் சேதப்படுத்தினர். மேலும் பின்தொடர்ந்து வந்த அவர்கள், எங்களுக்குக் கொலை மிரட்டலும் விடுத்தனர். அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் தல்லாகுளம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே மேலமடை போக்குவரத்து சிக்னல் அருகில் உள்ள புறநகர் மாவட்ட பாஜக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக சிசிடிவி பதிவுகளை வைத்து, அண்ணா நகர் உதவி ஆணையர் லில்லிகிரேஸ், ஆய்வாளர் பூமிநாதன் ஆகியோர் 2 பேரைப் பிடித்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x