Published : 12 Jan 2021 03:14 AM
Last Updated : 12 Jan 2021 03:14 AM
திருச்சி காஜாமலைப் பகுதியை சேர்ந்த நரேந்தர் சவுகான், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திருச்சி 5-வது ரயில்வே சிறப்புப் பாதுகாப்பு படை பட்டாலியனில் காவலராகப் பணிபுரிகிறேன். 25.2.2018-ல் மேகாலயா தேர்தல் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர் அர்ஜூன் தேஷ்வால், தனது உயர் அதிகாரி எம்.சி.தியாகியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான வாட்ஸ்அப் குழுவில் தகவல் வந்தது.
இந்தப் பதிவைப் படித்ததும் அதிர்ச்சி மற்றும் குழப்பம் அடைந்த நான், அந்த வாட்ஸ்அப் குழுவில் கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கும் முத்திரையைப் பதிவிட்டேன். இந்த தகவலுக்குப் பின்னூட்டம் அளித்த நான் உட்பட 7 பேரை விசாரணைக்கு அழைத்தனர்.
அப்போது உயர் அதிகாரிகளுக்கு எதிராக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, தகவலைப் படித்ததும் வழக்கம் போல் கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்கும் முத்திரையைப் பதிவிட்டதாகத் தெரிவித்தோம். இதையேற்காமல் உயர் அதிகாரியை கொலை செய்த குற்றவாளிக்கு ஆதரவாக குறுஞ்செய்தி அனுப்பியதாக என்னை பணியிலிருந்து நீக்கி உத்தரவிட்டனர். இது சட்டவிரோதம். அற்பமான காரணம் தெரிவித்து என்னைப் பணியிலிருந்து நீக்கிப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதேபோல பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ரயில்வே சிறப்பு பாதுகாப்புப் படை காவலர் கமலேஷ்குமார் மீனாவும் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் ஒய்.கிருஷ்ணன் வாதிடுகையில், வாட்ஸ்அப் தகவல்களுக்குப் பதிலளிப் போருக்குத் தண்டனை அளிப்பது தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் எதுவும் கூறப்படவில்லை. எனவே, மனுதாரர்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும், என்றார்.
பின்னர் மனுக்கள் குறித்து டெல்லி ரயில்வே சிறப்புப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல், தலைமைப் பாதுகாப்பு ஆணையர், திருச்சி கமாண்டிங் அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 10-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT