Published : 12 Jan 2021 03:15 AM
Last Updated : 12 Jan 2021 03:15 AM

அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டையில் அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து, 11 பவுன் தங்க நகைகள், ரூ.1.10 லட்சம் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வரதராஜ முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ஸ்டாலின் (76). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். இவர், தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 6 பவுன் தங்க நகைகள், ரூ.60 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

அதேபோல, ஸ்டாலின் வீட்டின் அருகே வசிப்பவர் ஜேசுதாஸ், இவரது மனைவி ஸ்டெல்லா. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக்கொண்டு சந்தைகோடியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். வீட்டில் ஆளில்லாததை அறிந்த மர்ம நபர்கள் ஜேசுதாஸ் வீட்டில் நுழைந்து அங்கு பீரோவை உடைத்து, அதிலிருந்த 5 பவுன் தங்க நகைகள் ரூ.50 ஆயிரம் பணத்தை திருடிச்சென்றனர்.

இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஸ்டாலின் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x