ஆரணி அருகே மின் ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு காவல்துறையினர் விசாரணை

மின் ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த துணிகள் சிதறியுள்ளன.
மின் ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த பீரோ திறக்கப்பட்டு, அதிலிருந்த துணிகள் சிதறியுள்ளன.
Updated on
1 min read

ஆரணி அருகே மின் ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் இ.பி.நகர் விவே கானந்தர் தெருவில் வசிப்பவர் மின் ஊழியர் ராஜசேகர்(51). இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற, குடும்பத்துடன் கடந்த 8-ம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பின்னர், சிகிச்சை முடிந்து நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 20 பவுன் நகை, 3 லட்சம் பணம் மற்றும் 500 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த ஆரணி கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்.

மேலும், கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து ஆரணி கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in