

‘மாநில அளவில் அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் சேலம் மாவட்ட முகவர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்,’ என ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2019-20-ம் நிதியாண்டில் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் அதிக வசூல் செய்து சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் அஞ்சலக சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியர் ராமன் வழங்கி பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் 2019-20-ம் நிதியாண்டில் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் ரூ. 2134.51 கோடி மொத்த வசூல் சாதனை செய்துள்ளது. தற்போது 2021-ம் நிதியாண்டில் நவம்பர் 2020 வரை ரூ.850.91 கோடி வசூல் செய்துள்ளது. தற்போது 2019-20-ம் நிதியாண்டில் சிறுசேமிப்பு வசூலில் சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிறு சேமிப்பு முகவர் வேலுமணி, அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங் களில் ரூ. 41,50,41,500 வசூல் செய்து, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்று சேலம் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். அவரை பாராட்டி கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அஞ்சலகங்களில் முதலீடு செய்யப்படும் தொகை மாநில அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மாநில அரசின் நிதிப் பற்றாக்குறையினை சரி செய்திடவும் உதவுகிறது. சிறுசேமிப்பு திட்டங்கள் மூலமாக தரப்படும் நிதி முழுவதுமாக மத்திய அரசால் மாநில அரசுகளுக்கு நீண்ட கால கடனாக வழங்கப்படுகிறது. சிறுசேமிப்பு நாட்டுக்கு மட்டுமல்லாது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் பயன்படுகிறது. எனவே, அஞ்சலக சிறுசேமிப்பின் அவசியத்தினை யும், பயன்களையும் பொது மக்களுக்கு சிறுசேமிப்பு முகவர் கள் எடுத்துச் சொல்லி அதிக அளவில் அஞ்சலகங்களில் முதலீடு செய்து மாநில அளவில் சிறுசேமிப்பு வசூலில் சேலம் மாவட்டம் தொடர்ந்து முதல் இடத்தை பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.