

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பிடிஓ அலுவலகங்களை பாமகவினர் நேற்று முற்றுகையிட்டனர்.
தமிழகத்தில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் மாநிலம் முழுவதும் பேரணி மற்றும் மனு கொடுக்கும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு கேட்டு பாமக சார்பில் பேரணி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பாமக ஒன்றியச் செயலாளர்கள் ஜலகண்டேஸ்வரன், ஜெய்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். துணைத் தலைவர் தண்டபாணி முன்னிலை வகித்தார். முன்னதாக, துணை செயலாளர் சரவணன் வரவேற்றார்.
இதைத்தொடர்ந்து, அண்ணா கலையரங்கம் அருகே தொடங்கிய பேரணியில் 250-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வேலூர் பிடிஓ அலுவலகம் நோக்கிச்சென்றனர். அங்கு வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து மனு கொடுக்க பாமகவினர் பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, அங்கு வந்த காவல் துறையினருக்கும் பாமகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு, முக்கிய நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அதன்பிறகு, 20 சதவீதம் இட ஒதுக்கீடு கோரிய மனுவை பிடிஓ கனகவல்லியிடம் பாமக நிர்வாகிகள் வழங்கிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
திருப்பத்தூர்
திருவண்ணாமலை
அதேபோல், செங்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரே முன்னாள் மாவட்டச் செயலாளர் சுரேஷ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வேலுசாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் கோரிக்கை மனுவையும் அளித்தனர்.
ஆரணியில் பாமக ஒன்றிய குழு துணைத் தலைவர் வேலாயுதம் தலைமையில் 1,500-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இட ஒதுக்கீடு கோரிக்கை மனுவை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அளித்தனர். தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்களிலும் பாமகவினர் இட ஒதுக்கீடு கோரும் போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர்.