Published : 17 Dec 2020 03:17 AM
Last Updated : 17 Dec 2020 03:17 AM

சீட்டு நடத்தி பண மோசடி; பெண் மீது புகார்

தீபாவளி சீட்டு, ஏலச்சீட்டு நடத்தி ரூ.35 லட்சம் வரை மோசடி செய்து பெண் ஒருவர் தலைமறைவான விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அருள்புரம் செந்தூரம் காலனி உப்பிலிபாளையம் சாலையைச் சேர்ந்த குமரன் என்பவரின்மனைவி மஞ்சு (29). இவர் மற்றும் அப்பகுதி பொதுமக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு விவரம்:

நான் மற்றும் எங்களது குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அருள்புரத்தை சேர்ந்த தேவகி என்பவர் நடத்தி வந்த தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டில் சேர்ந்து பணம் செலுத்தி வந்தோம். இந்நிலையில், பணத்தை செலுத்தியவர்களுக்கு திரும்ப தராமல் பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வந்தார். கடந்த ஒரு வாரமாக அவரை காணவில்லை. ரூ.35 லட்சத்துக்கும் அதிகமான தொகையை செலுத்தியுள்ளோம். எங்களை ஏமாற்றி விட்டு தலைமறைவாகியுள்ளார்.அவரை கண்டுபிடித்து, பணத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

புகார் அளிக்க வந்த பொது மக்கள் கூறும்போது, "இதேபோல ஏராளமானோருக்கு கோடிக்கணக்கில் பணம் தராமல், அந்த பெண் மோசடி செய்து தலைமறைவாகியுள்ளார்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x