Published : 12 Dec 2020 03:18 AM
Last Updated : 12 Dec 2020 03:18 AM

குளத்துக்குள் லாரி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் காட்டூர் அருகேயுள்ள கீழ முல்லைக்குடியில் சாலை அமைப்பதற்கு தேவையான பேவர் பிளாக் கற்களை ஏற்றிக் கொண்டு நேற்று முன்தினம் இரவு புள்ளம்பாடியில் இருந்து ஒரு லாரி புறப்பட்டது. கீழ முல்லைக்குடி வளன் நகர் பகுதிக்கு அருகே வந்தபோது, சாலையையொட்டிய சகதியில் சிக்கி அந்த லாரி குளத்துக்குள் கவிழ்ந்தது. இதனால் லாரியின் ஓட்டுநர் மற்றும் மேல்பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் உள்ளிட்ட 10 பேர் குளத்து நீருக்குள் மூழ்கினர்.

இதைக்கண்ட அப்பகுதியினரும், திருவெறும்பூர் போலீஸாரும் அங்குவிரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். அதற்குள் சிலர் தாங்களாகவே நீரில் இருந்து கரைக்கு வந்து சேர்ந்தனர். சிலரை பொதுமக்கள் உதவியுடன் போலீஸார் மீட்டனர். எனினும், புள்ளம்பாடி அருகேயுள்ள மணக்காடு கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன்(23) என்பவர் நீருக்குள் விழுந்தபோது, லாரியில் இருந்த பேவர் பிளாக் கற்கள் அவர் மீது விழுந்ததால், நீருக்குள் மூழ்கி மூச்சுத் திணறி இறந்தார். இந்த விபத்து குறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x