Published : 09 Dec 2020 03:15 AM
Last Updated : 09 Dec 2020 03:15 AM

டெங்கு கொசு ஒழிப்பு பணிக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் சேலம் மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தல்

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் சூரமங்கலத்தில் கொசுப்புழு கண்டறிந்து அழிக்கும் களப்பணியாளர்களுக்கான பணி ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து பேசியதாவது:

கொசு புழு ஒழிப்பு

சேலம் மாநகரப் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியில் கொசு புழு ஒழிப்பு களப்பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும். களப்பணியாளர்கள் வீடு வீடாக சென்று டெங்கு காய்ச்சல் பரப்பும் கொசுப் புழுக்களை கண்டறிந்து அதனை அழிக்க வேண்டும்.

கரோனா விழிப்புணர்வு

மேலும், வீடுகளை சுற்றி மழைநீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ளவும், சுற்றுப்புறத்தை துhய்மையாக பராமரிக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள நகர்புற சுகாதார மையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இத்துடன் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். வீடுகளுக்கு வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மண்டல உதவி ஆணையர் (பொ) செல்வராஜ், உதவி பொறியாளர்கள் அன்புசெல்வி, காவிய ராஜ், சுகாதார அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x