Published : 08 Dec 2020 03:14 AM
Last Updated : 08 Dec 2020 03:14 AM

காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் 1,091 ஏரிகள் முழுமையாக நிரம்பின

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கும் மேலாக மழை பெய்துவருகிறது. இந்த மாவட்டங்களில் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 1,483 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் 1,091 ஏரிகள் நிரம்பிவிட்டன. மேலும் 128 ஏரிகளில்75 சதவீதத்துக்கும் அதிகமான நீர்உள்ளது. அவையும் விரைவில்நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 20 ஏரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான நீர் உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள6 முக்கிய ஏரிகளில் தென்னேரி, பெரும்புதூர் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி, மணிமங்கலம் ஏரி ஆகிய 4 ஏரிகள் நிரம்பிவிட்டன. தாமல் ஏரி 18.60 அடி ஆழம் கொண்டது. இந்த ஏரிக்கு 14.50 அடிக்கு நீர் வந்துள்ளது. உத்திரமேரூர் ஏரி 20 அடி ஆழம் கொண்டது. இந்த ஏரிக்கு 11.50 அடி மட்டுமே தண்ணீர் வந்துள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தின் 10 முக்கிய ஏரிகளில் கொளவாய் ஏரி, பி.வி.களத்தூர் ஏரி, மானாம்பதி ஏரி, கொண்டங்கி ஏரி, சிறுதாவூர் ஏரி, தையூர் ஏரி, மதுராந்தகம் ஏரி ஆகிய 8 ஏரிகள் நிரம்பிவிட்டன. 15.30 அடி ஆழம் கொண்ட பாலூர் ஏரியில் இதுவரை 7.50 அடி மட்டுமே தண்ணீர் வந்துள்ளது. இதேபோல் 15.70 அடி கொண்ட பல்லவன்குளம் ஏரிக்கு 10.30 அடி மட்டுமே தண்ணீர் வந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின்கீழ் உள்ள 574 ஏரிகளில், நேற்றைய நிலவரப்படி 330 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.

இதில், கொசஸ்தலை ஆறு வடிநிலக்கோட்டத்தின்கீழ் உள்ள 324 ஏரிகளில் 114 ஏரிகளும், ஆரணி ஆறு வடிநில கோட்டத்தின்கீழ் உள்ள 250 ஏரிகளில் 216 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x