Published : 08 Dec 2020 03:15 AM
Last Updated : 08 Dec 2020 03:15 AM

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ‘நிவர்’ புயல் சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தனர்

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங் களில் ‘நிவர்’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

வங்கக் கடலில் உருவான ‘நிவர்’ புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய அரசின் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். நிவர் புயலால் வேலூர் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரத்து 475 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுடன் பப்பாளி, கொய்யா, பயிறு வகைகள் என தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்தது தெரியவந்தது. இதனால், 3 ஆயிரத்து 66 விவசாயி கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரத்து 732 ஏக்கர் வேளாண் பயிர்களுடன், தோட்டக்கலை பயிர்களும் சேதம டைந்துள்ளன. 5 ஆயிரத்து 327 விவ சாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு மாவட்டங்களிலும் புய லால் ஏற்பட்ட பாதிப்புகளைமத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளரும் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான மணிவாசன் தலைமையில் மத்திய நீர்வள ஆணைய இயக்குநர் ஹர்ஷா, மத்திய மின்சக்தி துறை துணை இயக்குநர் சுமன், மத்திய செலவினங்கள் துறை துணை இயக்குநர் அமித்குமார், மத்திய ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் தரம் வீர் ஜா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி யிருந்த மத்திய குழுவினரை வேலூர்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் நேற்று காலை சந்தித்து, புயல் சேத விவரங்களை வீடியோ படக் காட்சி கள் மூலம் விளக்கினார். அப்போது, தமிழக தோட்டக்கலைத் துறை கூடுதல் இயக்குநர் கண்ணன், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து, காட்பாடி அடுத்த கண்டிப்பேடு பகுதியில் புயலால் சேத மடைந்த பப்பாளி தோட்டம், இளையநல்லூர் ஊராட்சியில் நெல் வயல்கள், பொன்னை அணைக் கட்டில் சேதமடைந்த மதகுகள், மாதாண்டகுப்பம் கிராமத்தில் பாதிக்கப்பட்ட சாலைகளையும் மத்திய குழுவினர் ஆய்வு செய் தனர். இந்த ஆய்வின்போது திமுக பொதுச் செயலாளரும் காட்பாடி சட்டப்பேரவை உறுப்பின ருமான துரைமுருகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

ராணிப்பேட்டை

வேலூர் மாவட்டத்தில் ஆய்வுகளை முடித்துக்கொண்ட மத்திய குழுவினர் ராணிப்பேட்டை மாவட் டத்தில் ஆய்வுக்காக சென்றனர். ராணிப்பேட்டை பெல் விருந்தினர் மாளிகையில் மதிய உணவுக்காக தங்கிய மத்திய குழுவினரிடம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் புயல் சேத பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

பின்னர், வாலாஜா வட்டம் ஏகாம்பரநல்லூர் கிராமத்தில் பொன்னையாற்று பகுதியையும் நந்தியாலம் கிராமத்தில் ஏற்பட்ட வாழை மரங்கள் சேதத்தையும், ஆற்காடு சாத்தூர் கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகள், கே.வேளூர் கிராமத்தில் பாதிக்கப் பட்ட நெற்பயிர்களையும் மத்திய குழுவினர் தொடர்ச்சியாக ஆய்வு செய்து சென்னை புறப்பட்டனர். மத்திய குழுவினர் புயலால் சேதமடைந்த வேளாண், தோட்டக்கலை பயிர்களை பார்வை யிட்டதுடன், விவசாயிகளிடம் சேத விவரங்களை கேட்டறிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x