

தூத்துக்குடியில் நேற்று மழை ஓய்ந்திருந்த போதிலும் சில பகுதிகளில் தொடர்ந்து மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடை பெற்று வருகின்றன.
புரெவி புயல் தாக்க்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்கள் மிதமான மழை பெய்தது. இதனால் தூத்துக்குடி மாநகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குடியிருப்புகளை சூழ்ந்து தெருக்களில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் பாதிக்கப் பட்டனர்.
ராட்சத மோட்டார்
மாவட்டத்தில் நேற்று அவ்வப்போது லேசான தூறல் மழை மட்டும் பெய்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): விளாத்திகுளம் 2, காடல்குடி 4, வைப்பார் 4, சூரன்குடி 1, கோவில்பட்டி 5, கயத்தாறு 15, கடம்பூர் 8, எட்டயபுரம் 1 மி.மீ.