தூத்துக்குடி அருகே சொத்து தகராறில் தாயைக் கொன்ற 2 மகன்கள் கைது

தூத்துக்குடி அருகே சொத்து தகராறில் தாயைக் கொன்ற  2 மகன்கள் கைது
Updated on
1 min read

தூத்துக்குடி அருகே சொத்து தகராறில் தாயை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த மகன்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் தங்கம்மாள்புரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மாயபெருமாள் (60). இவரது மனைவி ஞானக்கனி (56). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மாயபெருமாளுக்கும், அவரது மகன்கள் முத்துராஜ்(37), செல்வகுமார் (35) ஆகியோருக்கும் இடையே குடும்பச் சொத்தை பிரிப்பது தொடர்பாக பிரச்சனை இருந்தது.

இந்நிலையில் கடந்த 24.11.2020 அன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முத்துராஜ், செல்வகுமார் ஆகியோர் சேர்ந்து தாய் ஞானக்கனியை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சொத்துக்காக மகன்கள் தன்னை தாக்கியதால் மனமுடைந்த ஞானக்கனி 25.11.2020 அன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞானக்கனி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இதுகுறித்து மாயபெருமாள் அளித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து முத்துராஜ், செல்வகுமார் இருவரையும் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in