Published : 06 Dec 2020 03:17 AM
Last Updated : 06 Dec 2020 03:17 AM

புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுகவினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வேளாண் சட்டத்துக்கு எதிராக கண்டன முழக்கம்

புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டங்களில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக சார்பில் மாநிலம் தழுவிய கருப்புக்கொடி ஏந்திய கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவு மான ஆர்.காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பேசும் போது, ‘‘மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை நாடே எதிர்க்கிறது. ஆனால், எடப் பாடி பழனிசாமி மட்டும் தமிழகத் தில் வரவேற்கிறார்.

எடப்பாடி பழனிசாமி இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே சென்னை கோட்டை பக்கம் செல்ல முடியும். வேளாண் சட்டத்தை வரவேற்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதனை அறிவிப் பாரா? என பார்ப்போம்’’ என்றார்.

வேலூர்

வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே திமுக மத்திய மாவட்டச்செயலாளரும் எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் தலைமையில் நடை பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன் னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சகி, வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், ஏ.பி.நந்தகுமார் செய்தி யாளர்களிடம் கூறும்போது, ‘‘அணைக்கட்டு தொகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பாதது குறித்து நான் பொய்யான தகவல் கூறியதாக அதிமு‌க தகவல் தொழில்நுட்ப பிரிவினர் நேரடி விவாதத்துக்கு அழைக்கிறார்கள். நான் தவறான தகவல் பரப்பினேன் என்று நிரூபித்தால் எனது பதவியை ராஜினாமா? செய்ய தயாராக இருக்கிறேன். இது சம்பந்தமாக அமைச்சர் கே.சி வீரமணியுடன் நேரடி விவாதத்துக்கு நான் எப் போதும் தயாராக இருக்கிறேன்.

வேலூர் மாவட்டத்தில் எம்எல்ஏ., எம்.பி., ஆக ஆசைப்படும் அதிமுக வினர் ஒருவராவது விரிஞ்சிபுரம், பள்ளிகொண்டா பாலாற்றில் இருந்து ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுத் தீர்களா? வேலூர் மாவட்டத்தில் கீழ் அரசம்பட்டு கிராமத்தில் நெல், வாழை அதிக அளவில் சேதம் அடைந்த பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்யா விட்டால் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்றார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் தலைமை தாங்கினார். வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தேவராஜ் முன்னிலை வகித்தார். திருப்பத்தூர் நகரச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். எம்எல்ஏக்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வ நாதன் (ஆம்பூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கதிர்ஆனந்த் பேசும்போது, ‘‘புதுடெல்லியில் கோரிக்கையை வென்றெடுக்க 1.30 லட்சம் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். 6 மாதங் களுக்கு தேவையான மளிகைப் பொருட்களுடன் புறப்பட்டுள்ளனர். மத்திய அரசாங்கத்தை வென்று காட்ட வேண்டும் என்ற முடிவுடன் போராடி வருகின்றனர்’’ என்றார்.

திருவண்ணாமலை

தி.மலை அண்ணாசிலை முன்பு திமுக சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு தலைமை வகித்தார். திமுக துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி கண்டன உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களால் ஒழுங்குமுறை விற்பனை கூடம்மூடப்படும். வேளாண் சட்டங்கள் சிறந்த சட்டங்கள் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இதற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். புதுடெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்” என்றார். இதையடுத்து, 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கருப்புக் கொடியுடன் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x