Published : 04 Dec 2020 03:16 AM
Last Updated : 04 Dec 2020 03:16 AM

பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க வேண்டும் மகளிர் ஆணையத் தலைவர் வலியுறுத்தல்

திருச்சி

பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் கேட்டுக் கொண்டார்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

முகாமுக்கு மாநில மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் தலைமை வகித்துப் பேசும்போது, பெண் குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும், அவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்தும், பெண்களுக்கு பணியிடங்களில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும் சுட்டிக்காட்டி, பெண்களுக்குரிய இலவச உதவி எண்களான 181, 1091, குழந்தைகள் பாதுகாப்பு இலவச உதவி எண் 1098, காவலன் செயலி உள்ளிட்டவை குறித்தும் எடுத்துரைத்தார்.

பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை குறித்தும் அதற்கு மாநில மகளிர் ஆணையத்தில் தீர்வு வழங்கப்படுவது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும், சிறுவயது திருமணங்கள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளை தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

முகாமில் மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாவட்ட சமூக நல அலுவலர் தமீமுன்னிசா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x