Published : 30 Nov 2020 03:11 AM
Last Updated : 30 Nov 2020 03:11 AM

ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் காய்ச்சல், வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் பொதுமக்களுக்கு பெரம்பலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

ஒரே தெருவில் 3 பேருக்கும் அதிக மானோருக்கு காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டால், அதுகுறித்து பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு மையத்துக்கு உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ப.  வெங்கட பிரியா அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் பூச்சிகளால் பரவும் வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் போன்ற தொற்று நோய்கள் வராமல் தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. யாருக்காவது காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ முகாம்கள் அல்லது அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டால், அதுகுறித்து அருகிலுள்ள அரசு மருத்துவமனை, நடமாடும் மருத்துவக் குழு மற்றும் பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு மையத்துக்கு(தொலைபேசி எண் 1077) உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதேபோல, குளங்கள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் போன்ற நீர்நிலைகளிலிருந்து தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதை பொதுமக்கள் பார்க்க நேர்ந்தால், அதுகுறித்தும் உடனடியாக பொது சுகாதாரத் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x