Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM

இயற்கை விவசாயம் செய்வோருக்கு மானியம் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்

கரூர்

தோட்டக்கலைத் துறையின் மூலம் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு மானிய உதவி வழங்கும் புதிய திட்டம் நிகழாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. அனைவரும் இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என காணொலிக் காட்சி வாயிலாக நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்ட த்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் சு.மலர்வழி கேட்டுக் கொண்டார்.

கரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நேற்று நடைபெற்றது.

மாவட்டத்தின் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் அலுவலகங்களிலிருந்து அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் காணொலிக் காட்சி வாயிலாக தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அப்போது, மண்புழு உரங்கள் பரவலாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். டிசம்பர் மாத இறுதிக்குள் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

அதன்பின் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி பேசியது: கூட்டுறவுத் துறை மற்றும் வேளாண்மைத்துறை இணைந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மண்புழு உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோட்டக்கலைத் துறையின் மூலம் இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களுக்கும் மானிய உதவி வழங்கும் புதிய திட்டம் நிகழாண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

அனைவரும் இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

குளித்தலை சார் ஆட்சியர் ஷே.ஷேக்அப்துல்ரஹ்மான், வேளாண்மை இணை இயக்குநர் ஆர்.சிவசுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் காந்திநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.உமாபதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மணிமேகலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x