

புயல் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற் கொள்ள மதுரை மாநகராட்சி ஊழியர்கள் 60 பேர் விழுப்புரம் சென்றனர்.
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரணப் பணிகளை மேற்கொள் வதற்காக மதுரை மாநகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் சுப்புராஜ், உதவிப் பொறியாளர் முருகன் ஆகியோர் தலைமையில் 30 தூய்மைப் பணியாளர்கள், 30 மின் உதவியாளர்கள் மற்றும் பொறியியல் பணியாளர்கள் பஸ், மாநகராட்சி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களை ஆணையாளர் விசாகன் வழியனுப்பி வைத்தார்.
மரங்களை வெட்டுவதற்கு 10 மர அறுவை இயந்திரங்கள், 3 டிப்பர் லாரிகள், 1 ஆக்கிரமிப்பு அகற்றும் வாகனம், 50 பெரிய கூட்டுமார்கள், 50 குப்பைக் கூடைகள், தலா 25 கிலோ கொண்ட 50 மூட்டை பிளீச்சிங் பவுடர்கள், 50 மழைக் கோட்கள், 50 ஒளிரும் சட்டைகள், ஊழியர்களுக்குத் தேவையான கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட தளவாடப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் குமரகுருபரன், உதவிப் பொறியாளர் (வாகனம்) அமர்தீப் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.