Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் இன்றும், நாளையும் யாரும் விடுமுறை எடுக்கக் கூடாது விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 'நிவர்' புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகள்மேற்கொள்வது குறித்து அனைத் துத்துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் அண்ணாதுரை பேசியதாவது:

கடற்கரையில் உள்ள 1,400 படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். தீயணைப்புத் துறையும், காவல்துறையும் பேரிடர் நேரத்தில் தேவைப்படும் அளவுக்கு படகுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு சீல் வைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 8.49 லட்சம் கால்நடைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். 1,050 ஹெக்டேரில் உள்ள தென்னை மரங்கள் சேதமடையாமல் பாதுகாக்க வேளாண்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்வாரியத்தினர் மின் கம்பிகளை சரியாக பராமரிக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 24, 25-ம் தேதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது. 222 நீச்சல் தெரிந்த வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், புயலின் தீவிரத்தை கணக்கிட்டு நாளை (நவ. 25) டாஸ்மாக், வணிக வளாகங்கள் அனைத்தும் மூடப்படவும், போக்கு வரத்தை தடை செய்யவும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் புயல் கரையை கடக்கும் வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று விளம்பரப்படுத்த வேண்டும். மண் சுவர் இடிந்து விழுந்து உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்படிப்பட்ட வீடுகளில் குடியிருப்போரை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஆட்சியர் அண்ணாதுரை செய்தியாளர் களிடம் பேசும்போது, கூட்டத்தில் பங்கேற்காத மின்வாரிய அலுவலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக மின்வாரிய தலைமை செயற்பொறியாளர் துரைசாமியிடம் கேட்டபோது, “இதுகுறித்து விசாரணை மேற் கொள்ளப்படும்” என்றார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) ஸ்ரேயா.பி.சிங், வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்ரபாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், சார்-ஆட்சியர் அனு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

24, 25-ம் தேதிகளில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் யாரும் விடுமுறை எடுக்கக்கூடாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x