Published : 24 Nov 2020 03:14 AM
Last Updated : 24 Nov 2020 03:14 AM

மனநலம் பாதிக்கப்பட்ட 7 பேர் சிகிச்சைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

நாமக்கல்

நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு குணமடைந்த 7 பேர் அவர்களுடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் சுற்றித்திரிந்த 85 நபர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் மீட்கப்பட்டனர். அவர்கள் ராசிபுரத்தில் அரசு நிதி உதவியுடன் செயல்படும் அனைக்கும் கரங்கள் தொண்டு நிறுவன மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு தங்கும் இடம், உணவு, மருத்துவ உதவி மற்றும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இதில், 7 பேர் மனநலம் பாதிப்பில் இருந்து மீண்டு குணமடைந்தனர். இதையடுத்து 7 பேரும் அவர்களுடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்து 7 பேரையும் அவரது குடும்பத்தினருடன் சேர்த்து வழியனுப்பி வைத்தார்.

மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை குடும்பத்தினரும், உறவினர்களும் சமூக அக்கறையுடன் பாதுகாப்பாகவும் மன மகிழ்ச்சியுடனும் பேணிகாக்க வேண்டும் எனவும் ஆட்சியர் அறிவுத்தினார். தொடர்ந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகள் 4 பேருக்கு வழங்கப்பட்டது. இதுபோல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பா.ஜான்சி மற்றும் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படம் உள்ளது.

ராசிபுரத்தில் அரசு நிதியுதவியுடன் செயல்படும் மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டு குணமடைந்த நபர்களை அவர்களது குடும்பத்தினரிடம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் ஒப்படைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x