Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

டெங்கு, கரோனா தடுப்பு, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்து துறை அலுவலர்களுடன்மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், கரோனா வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணி, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் மத்திய மண்டல அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை வகித்து பேசியதாவது:

மழைக் காலங்களில், சாலையோரங்கள், மேம்பாலங்களின் கீழ் தேங்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த மோட்டார் பம்ப்-வுடன் கூடிய வாகனங்கள், மீட்புப் பணிக்கு தேவைப்படும் பொக்லைன் இயந்திரங்கள், மரம் அறுக்கும் கருவிகள், தேவையான ஆட்களை அனைத்து மண்டலங்களிலும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழைக்கால தொற்று நோய்களை தடுக்க மருந்துகள் மற்றும் நீர்நிலைகள் அருகே மணல் மூட்டைகளை போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும்.

பாதிக்கப்படும் மக்களை தங்கவைக்க, பள்ளி வளாகங்களை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, உணவுக்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். சாலையோர கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்களை அடைப்பு ஏற்படாத வகையில் தூர்வார வேண்டும். மழையின் போது 24 மணி நேரமும் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து கண்காணித்து தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மாநகரில் டெங்கு பரவுவதை தடுக்க வீதி வாரியாக கொசு மருந்து தெளிக்கப்பட்டுவருகிறது. மாநகரில் உள்ள அனைத்து நீர்தேக்கத் தொட்டிகளிலும் அபேட் மருந்து ஊற்றவேண்டும். தண்ணீர் தேங்கும் வகையில் காணப்படும் பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், மண்பாண்டங்கள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் கப்புகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தொடர் நடவடிக்கையின் காரணமாக, மாநகரில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. வீடு வீடாக சென்று, சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்களை கண்டறியும் பணியும், அப்படி கண்டறியப்பட்டால் அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணியையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி சுகாதாரத் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x