Published : 22 Nov 2020 03:14 AM
Last Updated : 22 Nov 2020 03:14 AM

திருவேற்காடு நகராட்சி ஆணையரை தாக்க முயன்ற முன்னாள் நகர்மன்ற தலைவரின் தம்பி மீது புகார்

திருவள்ளூர்

பொது இடத்தில் கழிவுநீர் விட்டதை தட்டிக்கேட்ட திருவேற்காடு நகராட்சிஆணையரை தாக்க முயற்சித்தது தொடர்பாக, முன்னாள் நகர்மன்ற தலைவரின் தம்பியை போலீஸார் விசாரிக்கின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை பொது இடங்களில் ஊற்றக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவேற்காடு நகராட்சி ஆணையர் செந்தில்குமரன், சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் நேற்று திருவேற்காடு அடுத்த கோலடி பகுதிக்குச் சென்றனர். அப்போது, வழியில் பொது இடத்தில் கழிவுநீர் லாரியில் இருந்து கழிவுநீர் ஊற்றப்பட்டிருப்பதைக் கண்டு அதிகாரிகள் கண்டித்தனர்.

அப்போது, லாரியின் உரிமையாளர் ரவி, ஆணையர் செந்தில்குமரனை தாக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஆணையர் அளித்த புகாரின் பேரில், திருவேற்காடு போலீஸார் ரவியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

பிடிபட்ட ரவி, திருவேற்காடு நகராட்சி முன்னாள் அதிமுக நகர்மன்ற தலைவர் மகேந்திரனின் தம்பி ஆவார். மேலும், கழிவுநீர் லாரியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x