Published : 22 Nov 2020 03:15 AM
Last Updated : 22 Nov 2020 03:15 AM
தருமபுரி மாவட்ட மாணவர்கள் சுருக்கத் திருத்த சிறப்பு முகாமை தவறாமல் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 16-ம் தேதி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இந்தப் பட்டியல் மாவட்டத்தில் உள்ள 856 வாக்குச் சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்டம் முழுக்க நேற்று சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடந்தது. இலக்கியம்பட்டி அரசு மகளிர் உயர் நிலைப் பள்ளி, அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதிகோன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, பழைய தருமபுரி அரசு நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற சுருக்கத் திருத்த முகாமை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியது:
முந்தைய காலங்களில் இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க பள்ளி, கல்லூரிகளில் மொத்தமாக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணி நடைபெறும். தற்போது கரோனா பரவலை தடுக்க பள்ளி, கல்லூரிகள் விடுமுறையில் உள்ளன.
எனவே, சிறப்பு முகாமை இளம் வாக்காளர்களான மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் தவறாமல் பயன்படுத்தி பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
ஆய்வின்போது, தருமபுரி கோட்டாட்சியர்(பொ) தணிகாசலம், வட்டாட்சியர் ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT