Published : 21 Nov 2020 03:16 AM
Last Updated : 21 Nov 2020 03:16 AM

கோவை குனியமுத்தூர் பகுதியில் சாலைகளில் தேங்கியுள்ள நீரால் பொதுமக்கள் அவதி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட குனியமுத்தூர் அருகேயுள்ள வசந்தம் நகர், பிருந்தாவன் நகர் பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், அப்பகுதிகளில் உள்ள 3 கிணறுகள் நிரம்பி, அவற்றிலிருந்து வெளியேறும் தண்ணீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் மட்டுமின்றி, நடந்து செல்வோரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘இங்கு குடியிருப்புகளுக்கு அருகே செங்குளம் உள்ளது. தற்போது வடகிழக்குப் பருவ மழை தொடர்ந்து பெய்வதால், செங்குளத்துக்கு அதிக அளவில் தண்ணீர் வருகிறது. குளம் மேடாக அமைந்துள்ளதால், நிறைவதில் தாமதம் ஏற்பட்டு, அங்கு வரும் தண்ணீர் நிலத்தின் வழியாக அருகில் உள்ள கிணறுகளுக்குச் செல்கிறது. இதனால் கிணறுகள் நிரம்பி, அதிலிருந்து தண்ணீர் வெளியேறி சாலைகளில் வழிந்தோடுகிறது. இங்குள்ள 3 கிணறுகளும் நிரம்பி, தண்ணீர் சாலைகளில் வழிந்தோடுகிறது. மேலும், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்த நீரை அகற்றுமாறு மாநகராட்சி அலுவலர்களிடம் பலமுறை வலியுறுத்தியும், உரிய நடவடிக்கை இல்லை. சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரிலேயே பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டியுள்ளது. சற்று தண்ணீர் வடிந்தாலும், சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.

எனவே, சாலைகளில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதுடன், சேறு, சகதிகளையும் அகற்ற வேண்டும். மேலும், மீண்டும் தண்ணீர் தேங்காத வகையில் வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி கூறும்போது, ‘‘அப்பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றி, கழிவுநீர்க் கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x