Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

திருச்சி, கரூர், பெரம்பலூரில்மின் ஊழியர் மத்திய அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருச்சி: தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் நேற்று திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின் வாரிய திருச்சி மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், உடற்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு முடித்து பணி நியமனத்துக்காக காத்திருப்போருக்கு பணி நியமனத்தை உடனே வழங்க வேண்டும். கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கள உதவியாளராக பணி நியமன உத்தரவு வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலியாக ரூ.380 வீதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில துணைத் தலைவர் எஸ்.ரங்கராஜன் தலைமை வகித்தார். டி.பழனியாண்டி, எம்.ரவிச்சந்திரன், டி.ரியாசுதீன், ஆர்.சுப்பிரமணியன், கே.ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரூர்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மற்றும் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கிளைத் தலைவர் ஏ.பெருமாள் தலைமையில் கரூர் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர்: பெரம்பலூர் நான்கு சாலை அருகே உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நாராயணன், கோபிநாத், ராஜா, காசிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், வட்ட பொருளாளர் கண்ணன், வட்ட துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x