Published : 21 Nov 2020 03:17 AM
Last Updated : 21 Nov 2020 03:17 AM

உதவுவதுபோல் நடித்து ஸ்டுடியோ உரிமையாளரிடம் ரூ.4 லட்சம் மதிப்பிலான கேமரா திருட்டு

குடியாத்தம்

குடியாத்தத்தில் கீழே விழுந்த ஸ்டுடியோ உரிமையாளருக்கு உதவுவதுபோல் நடித்து, ரூ.4 லட்சம் மதிப்பிலான கேமரா, லென்ஸ் அடங்கிய பையை இளைஞர்கள் 3 பேர் திருடிச்சென்றது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காங்கிரஸ் ஹவுஸ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (50). போட்டோ ஸ்டுடியோ உரிமை யாளர். இவர், காட்பாடி அருகே யுள்ள லத்தேரியில் நிகழ்ச்சி ஒன்றை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். வீட்டு வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியபோது நிலை தடுமாறிய மோகன் கேமரா, லென்ஸ் இருந்த பையுடன் கீழே விழுந்தார்.

சுதாரித்து எழுவதற்குள் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த 3 இளைஞர்கள் மோகனுக்கு உதவினர். வாகனத்தை பிடித்தபடி மோகன் எழுந்தபோது, இரு சக்கரவாகனத்தில் தயாராக இருந்த இளைஞர்கள் திடீரென கீழே இருந்த கேமரா பையை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். கேமரா பையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான கேமரா மற்றும் விலை உயர்ந்த லென்ஸ்களும் இருந்தன.

இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் மோகன் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் சீனிவாசன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மோகனிடம் இருந்து கேமரா பையை திருடிச் செல்லும் இளைஞர்கள் குறித்த காட்சிகள் அனைத்தும் அவரது எதிர் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.இந்தப் பதிவுகளை கொண்டு காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x