Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

ஈரோடு வழியாக இயக்கப்படும் சேலம் - கோவை பயணிகள் ரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை

சேலம் - கோவை இடையே ஈரோடு வழியாக இயக்கப்படும் பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே ஆலோசனைக்குழு முன்னாள் உறுப்பினர் கே.என்.பாஷா, தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

கரோனா தொற்று பரவல் காரணமாக சேலத்திலிருந்து ஈரோடு, திருப்பூர் வழியாக கோவை செல்லும் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப் பட்டுள் ளது. தற்போது இயக்கப்படும் விரைவு ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், முன்பதிவு செய்யாமல் சேலம் - கோவை இடையே பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பயணிகள் ரயிலில் ஈரோடு - திருப்பூர் மற்றும் ஈரோடு சேலம் இடையே ரூ.15, ஈரோடு - கோவை பயணத்திற்கு ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்பட்டது. ஈரோடு - கோவை இடையே அரசுப் பேருந்து கட்டணமாக ரூ.83, தனியார் பேருந்தில் ரூ.65 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆனால், தற்போது ஈரோட்டி லிருந்து கோவை செல்ல ஐதராபாத் - திருவனந்தபுரம் ரயிலில் முன் பதிவு செய்தால், இரண்டாம் வகுப்பு படுக்கைக் கட்டணமாக ரூ.355 செலுத்த வேண்டியுள்ளது. மற்ற ரயில்களில் இரண்டாம் வகுப்பு கட்டணமாக ரூ.165 வசூலிக்கப்படுகிறது.

எனவே, ஈரோடு மார்க்கமாகச் செல்லும் பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கினால், கோவை, திருப்பூர், சேலம், கொடுமுடி, கரூர் ஆகிய ஊர்களுக்கு நாள்தோறும் பணி நிமித்தமாக செல்பவர்கள், மருத்துவமனை மற்றும் கோயில்களுக்குச் செல்வோர் பயனடைவர். எனவே, பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லைக்கு ரயில்விட வேண்டும்

அதே போல் தென்மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், கோவை - நாகர்கோயில், ஈரோடு - திருநெல்வேலி ரயில்களையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x