Published : 02 Nov 2020 03:14 AM
Last Updated : 02 Nov 2020 03:14 AM

குடிநீர்த் திட்டப் பணியாளர்களின் ஊதிய குறைப்பை ரத்து செய்யக் கோரி நவ.5, 6-ம் தேதிகளில் ஆர்ப்பாட்டம் கு.பாலசுப்பிரமணியன் தகவல்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர் சங்க மாநில மையத்தின் கலந்தாய் வுக் கூட்டம் மாநிலத் தலைவர் சி.பழனிவேல் தலைமையில் கரூரில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க சிறப்புத் தலைவர் கு.பாலசுப்பிரமணியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பேரூராட்சித் துறையில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களின் தர ஊதியத்தை ரூ.1,900-லிருந்து ரூ.1,300 ஆக குறைத்து சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதனால், பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் மாத ஊதியத்தில் ரூ.6,000 முதல் ரூ.7,000 வரை குறைகிறது. இந்த ஊதியக் குறைப்பு நடவடிக்கையால் 528 பேரூராட்சிகளின் குடிநீர்த் திட்டத்தில் பணியாற்றும் 3,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இந்த உத்தரவை உடனடியாக ரத்து செய்யக் கோரி, தமிழகத்தில் நவ.5, 6-ம் தேதிகளில் தலா 4 இடங்களில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மண்டல அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும், இதுதொடர்பாக நீதிமன்றத் தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், டாஸ்மாக் பணியாளர் கள் சங்க மாநிலத் தலைவர் கு.சரவணன், துணைத் தலைவர் வெ.சிவக்குமார், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் இளங்கோவன், மாவட்ட பொறுப்பாளர் உதயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x