Published : 30 Nov 2021 03:07 AM
Last Updated : 30 Nov 2021 03:07 AM

20 மணி நேரம் சுரங்க நிலத்தை தோண்டி உயிருடன் மீண்ட 4 தொழிலாளர்கள் :

பொகாரோ: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 4 பேர் 20 மணி நேரம் சுரங்கத்தை தோண்டி தாங்களே மீண்டு வெளியே வந்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் பர்பாத்பூர் என்ற இடத்தில் உள்ள கைவிடப்பட்ட நிலக்கரி சுரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட லட்சுமண் ராஜ்வர் (42), அனதி சிங் (45), ரவன ராஜ்வர் (46), பரத் சிங் (45) ஆகிய 4 பேர் சிக்கினர். இவர்கள் அனைவரும் சந்தன்கியாரி ப்ளாக் பகுதியைச் சேர்ந்த டிலடண்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள். தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது சுரங்கம் இடிந்து விழுந்ததில் இவர்கள் 4 பேரும் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டனர்.

இவர்களை மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் சுரங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியாத நிலையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சுரங்கத்தில் சிக்கிய 4 பேரும் திங்கட்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சுரங்கத்தில் இருந்து மீண்டு வெளியே வந்தனர். வெளியே வருவதற்காக வழியை காண 20 மணி நேரம் தோண்டியதாக மீண்டு வந்த 4 பேரும் தெரிவித்தனர். சட்டவிரோதமாக சுரங்கம் தோண்ட இந்த 4 பேருடன் மொத்தம் 6 பேர் சென்றதாகவும் மீதி 2 பேர் சுரங்கம் இடிந்த உடனேயே மீண்டு வந்துவிட்டதாகவும் போலீஸ் சூப்பிரண்டென்ட் சந்தன் குமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x