Published : 29 Nov 2021 03:06 AM
Last Updated : 29 Nov 2021 03:06 AM

மேற்கு வங்கத்தில் இறுதி ஊர்வலத்தில் - வேன் மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழப்பு; 5 பேர் காயம் :

மேற்கு வங்கத்தில் மயானத்துக்கு உடலை கொண்டு செல்லும்

போது, வேன் மீது லாரி மோதியதில் 18 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு வங்க மாநிலம் 24 பர்கானாஸ் மாவட்டம் பக்தா என்ற இடத்தில் கடந்த சனிக்கிழமை ஒருவர் இறந்துள்ளார். அவரது உடலை உறவினர்கள், நண்பர் கள் வேனில் ஏற்றி நடியா மாவட்டத்தின் புல்பாரி பகுதியில் உள்ள நபதீப் மயானத்துக்கு வேனில் எடுத்து சென்றனர்.

மேற்கு வங்கத்தில் தற்போது மூடுபனி நிலவுகிறது. சாலைகளில் இதனால் போக்குவரத்து சிரம மாக உள்ளது. இந்நிலையில், இரவு நேரம் மற்றும் கடும் பனியில் இறந்தவரின் உடலுடன் வேனில் இறுதி ஊர்வலம் நடந்தது. அப்போது பாறைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று, வேன் மீது பயங்கரமாக மோதியது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த அந்த லாரி, திடீரென இயங்க தொடங்கி சாலையில் ஓடத் தொடங்கியதாகவும் அப்போது வேன் மீது மோதியதாகவும் அதனால் பலர் உயிரிழந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.

இதுகுறித்து ஹன்ஸ்கலி போலீஸ் நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடும் பனி மற்றும் அதிவேகமாக லாரி வந்தது தான் விபத்துக்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது. இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றனர்.

இந்த விபத்துக்கு மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x