Published : 19 Nov 2021 03:08 AM
Last Updated : 19 Nov 2021 03:08 AM

தெலங்கானா மாநிலத்திடம் இருந்து - நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி முதல்வர் சந்திரசேகர ராவ் தர்ணா : புழுங்கல் அரிசியை வாங்க மத்திய அரசு மறுப்பு

ஹைதராபாத்:

ஹைதராபாத் இந்திரா பூங்கா வில் நேற்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையில், மத்திய அரசுக்கு எதிராக தர்ணா போராட்டம் நடந்தது.

மாநிலம் முழுவதும் டிஆர் எஸ் கட்சியினர் மாவட்ட தலைநகர் களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், முதல்வர் சந்திர சேகரராவ் பேசியதாவது:

நெல் கொள் முதலை மத்திய அரசே செய்ய வேண்டும். இதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இருக்க கூடாது. கொள்முதல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், தற்போதைய மத்திய அரசு விவசாயிகள் நஷ்டமடைந்து கண்ணீர் விட்டு கதறினாலும், கண்டுக்கொள்ளாமல், நெல்கொள்முதல் விலையை அறிவிக்காமல் மவுனம் காக்கிறது. இதனை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக போராட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடக்கம் மட்டுமே. முடிவல்ல.

இதுகுறித்து கடந்த புதன் கிழமை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினேன். தேவைப்பட்டால் டெல்லி சென்று, வடமாநில விவ சாயிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு எதிராக போராடுவோம். இப்பிரச்சி னையை மத்திய அரசு நல்ல முறையில் தீர்த்து வைத்து விட்டால் நாங்கள் ஏன் போராட வேண்டும். இவ்வாறு சந்திரசேகர ராவ் பேசினார்.

முதல்வராக பதவியேற்று முதன் முறையாக சந்திரசேகர ராவ் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

மத்திய அரசு மறுப்பு

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நெல் கொள்முதல் குறித்து கூறும்போது, ‘‘கோடை கால பயிர்கள் குறைந்த அளவே கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த குளிர்கால பயிர்கள் அடுத்த ஆண்டு மாநிலங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் கொள்முதல் செய்யப்படும். புழுங்கல் அரிசியை மத்திய அரசு கொள்முதல் செய்ய இயலாது. நெல், கோதுமை பயிர்களை குறைவாக பயிரிட, விவசாயிகளை கேட்டுக் கொள்கிறோம்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x