Published : 17 Oct 2021 03:07 AM
Last Updated : 17 Oct 2021 03:07 AM
குர்ஹான்: தேசிய பாதுகாப்புப் படை (என்எஸ்ஜி) தோற்றுவிக்கப்பட்டதன் 37-வது ஆண்டு விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக, ஹரியாணா மாநிலம் குர்கானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்எஸ்ஜி இயக்குநர் எம்.ஏ. கணபதி பேசியதாவது:
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, தீவிரவாதிகளும் தங்களின் தாக்குதல் உத்தியை மாற்றி வருகின்றனர். அந்த வகையில், ஆளில்லா விமானம் (டிரோன்) மூலம் தாக்குதல் நடத்துவதை அவர்கள் தற்போது கையில் எடுத்துள்ளனர். ஆனால், டிரோன் தாக்குதலையும் சமாளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் என்எஸ்ஜி கையாண்டு வருகிறது. அத்துமீறி வரும் டிரோன்கள் குறித்து சமிக்ஞை அளிக்கும் ரேடார், அவற்றை செயலிழக்க செய்யும் ஜாமர், அவற்றை தாக்கி அழிக்கும் துப்பாக்கிகள் ஆகியவை என்எஸ்ஜியிடம் உள்ளன.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள விமானப் படை தளங்களில் டிரோன் தாக்குதலை முறியடிக்க என்எஸ்ஜி வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டிரோன் தாக்குதலுக்கு எதிராக பிரத்யேக படை உருவாக்கப்படும் வரை என்எஸ்ஜி வீரர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டிருப்பர். இவ்வாறு கணபதி கூறினார். -பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT