Published : 03 Jul 2021 03:12 AM
Last Updated : 03 Jul 2021 03:12 AM

அறியாமை வைரஸுக்கு தடுப்பூசி எதுவும் இல்லை : ராகுல் காந்திக்கு ஹர்ஷ் வர்தன் பதில்

நாட்டில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்து மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “ஜூலை மாதம் வந்துவிட்டது. தடுப்பூசி இன்னும் வரவில்லை. தடுப்பூசி எங்கே?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தனது ட்விட்டர் பதிவில், “ஜூலை மாதத்துக்கான தடுப்பூசி குறித்த தகவல்களை நேற்று தான் நான் வெளியிட்டேன். ராகுல் காந்திக்கு என்னதான் பிரச்சினை. அவர் அந்த செய்தியை படிக்கவில்லையா? அல்லது அவருக்குபுரியவில்லையா? ஆணவத்துக்கும் அறியாமைக்கும் தடுப்பூசி கிடையாது. தலைமை மாற்றம் குறித்து காங்கிரஸ் கட்சி சிந்திக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று முன்தினம் தனது ட்விட்டர்பதிவில், “நாட்டின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் குறித்து பல்வேறு தலைவர்களும் பொறுப்பற்ற வகையில் கருத்து கூறுவதை பார்க்கிறேன். சில உண்மைகளை கூறுவதன் மூலம் இத்தலைவர்களின் நோக்கத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன். மத்திய அரசு 75 சதவீத தடுப்பூசிகளை இலவசமாக வழங்கிய பிறகு, தடுப்பூசி பணி வேகம் எடுத்துள்ளது. ஜூன் மாதத்தில் 11.50 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன” என்று கூறியிருந்தார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x