Published : 15 Jun 2021 03:12 AM
Last Updated : 15 Jun 2021 03:12 AM
பெங்களூரு: விபத்தில் சிக்கிய, தேசிய விருது பெற்ற கன்னட நடிகர் ‘சஞ்சாரி’ விஜய் (38) நேற்று மூளைச்சாவு அடைந்தார்.
பெங்களூருவை சேர்ந்த விஜயகுமார் (38), சஞ்சாரி என்ற நாடக குழுவில் இணைந்து 50-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்து பிரபலமானார். இதனால் சஞ்சாரி விஜய் என அழைக்கப்பட்ட இவர் 2011-ல் 'ரங்கப்பா ஹோக்பிட்னா' என்ற திரைப்படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார்.
தமிழகத்தை சேர்ந்த திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயசரிதையை வைத்து இயக்குநர் பி.எஸ்.லிங்கதேவரு இயக்கிய 'நானு அவனல்லா அவளு' (நான் அவனல்ல அவள்) படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் சஞ்சாரி விஜய் நடித்தார். அவரது சிறப்பான நடிப்புக்கு 2015-ம் ஆண்டு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழில் 'வனயுத்தம்' உட்பட 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 12-ம் தேதி இரவு நண்பரை சந்தித்துவிட்டு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பும்போது சாலை விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறினர்.இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT