Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
மேற்குவங்க தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 213 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் தோல்வியை தழுவியுள்ளார்.
இந்த பின்னணியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிண மூல் எம்எல்ஏக்கள் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். கூட்டத்தில் அவர் பேசும்போது, "திரிணமூல் வெற்றியை ஒட்டுமொத்த நாடும்கொண்டாடி வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து களை தெரிவித்து வருகின்றனர். புதிய எம்எல்ஏக்கள் மிகுந்த பொறுப்புடன் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதன்பின் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தன்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இதன்படி திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி 3-வது முறையாக நாளை மேற்குவங்க முதல்வராக பதவியேற்கிறார்.
முன்னதாக மம்தா கூறும்போது, "நந்திகிராம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த கோரியுள்ளோம். ஆனால் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல், நிர்பந்தம் இருப்பதால் அவர் எங்களது கோரிக்கையை ஏற்கமறுக்கிறார். மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றத் தில் முறையிடுவோம்" என்றார்.
கடந்த 2011, 2016 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திரிணமூல் வெற்றி பெற்று அடுத்தடுத்து 2 முறை மம்தாபானர்ஜி முதல்வராக பதவி வகித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT