Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

ஒரே நாளில் 26 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசி :

நாடு முழுவதும் ஒரே நாளில் 26 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், 45 வயதுக்கு உட்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது. எனினும்போதிய தடுப்பூசி கையிருப்பில் இல்லாததால் பெரும்பான்மையான மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த பின்னணியில் மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 26,08,948 பேருக்குகரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 14,77,309 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 11,31,639 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருக்கிறது.

இதுவரை 15.48 கோடி தடுப்பூசி

ஒட்டுமொத்தமாக இதுவரை15,48,54,096 தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 12,69,64,207 பேருக்கு முதல் தவணையும், 2,78,89,889 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டோரில் 5,23,51,313 பேருக்கு முதல் தவணையும் 1,10,78,040 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது. 45 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டோரில் 5,26,53,077 பேருக்கு முதல் தவணையும், 37,59,948 பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. சுகாதார ஊழியர்களில் 94,10,892 பேருக்கு முதல் தவணையும் 62,40,077 பேருக்கு 2-ம்தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருக்கிறது. முன்கள ஊழியர்களில் 1,25,48,925 பேருக்கு முதல் தவணையும், 68,11,824 பேருக்கு 2-ம் தவணை கரோனா தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இவ்வாறு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x