Published : 07 Apr 2021 03:15 AM
Last Updated : 07 Apr 2021 03:15 AM

வேளாண் சட்டம், சிஏஏ குறித்து பொய் பிரச்சாரம் செய்கின்றனர் - கட்சியை விட நாடுதான் மிகவும் முக்கியம் : பாஜக நிறுவன நாள் விழாவில் பிரதமர் மோடி உறுதி

‘‘வேளாண் சட்டங்கள், சிஏஏ ஆகியவை குறித்து பொய் பிரச்சாரங்கள் செய்து, அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால், தனி ஒருவரை விட கட்சி முக்கியம்; கட்சியை விட நாடு முக்கியம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில்தான் பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது’’ என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகக் கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி தொடங்கி 41-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடம் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:

தனிப்பட்ட ஒருவரை விட கட்சிதான் முக்கியம்; ஆனால், கட்சியை விட நாடு முக்கியம் என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில்தான் பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கம் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி காலத்தில் இருந்து தொடர்ந்து இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாஜக.வை விரிவுப்படுத்துவதில் கட்சியின் மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட பலர் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளனர்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட 370-வது சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும். காஷ்மீருக்கு அரசியலமைப்பு சட்ட உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று சியாமா பிரசாத் முகர்ஜி ஒரே இந்தியா என்ற லட்சியத்தை அடைய விரும்பினார். அதை நாங்கள் நிறைவேற்றி உள்ளோம்.

பொய் பிரச்சாரம்

மத்திய அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், புதிய வேளாண் சட்டங்கள் குறித்தும் குடியுரிமை சட்டம் குறித்தும் வதந்திகளைப் பரப்பி நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்க சதி நடக்கிறது. அதை தடுக்க வேளாண் சட்டங்கள், குடியுரிமை சட்டங்கள் குறித்த உண்மைகளை பொதுமக்களிடம் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விவசாயிகளின் நிலங்கள் பிடுங்கப்படும். குறிப் பிட்ட சிலருடைய குடியுரிமை பறிக்கப்படும் என்று பொய் தகவல்களை பரப்புன்றனர். இதில் அரசியல் உள்நோக்கம் கொண்ட சில அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பாரதிய ஜன சங்கம் என்ற கட்சியை கடந்த 1951-ம் ஆண்டு சியாமா பிரசாத் முகர்ஜி தொடங்கினார். அதன்பிறகு பலகட்சிகளுடன் ஜன சங்கம் இணைந்தது. கடந்த 1980-ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x