Published : 24 Feb 2021 03:17 AM
Last Updated : 24 Feb 2021 03:17 AM
புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை 1.17 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. தடுப்பூசி செலுத்துவதில் முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இதுவரை நாடு முழுவதும் 1.17 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 1.14 கோடி பேர் சுகாதார ஊழியர்களும், முன்களப் பணியாளர்களும் ஆவர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில், தற்போது அதன் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எனவே, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் பின்பற்றுமாறு மேற்குறிப்பிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT