Published : 23 Feb 2021 03:15 AM
Last Updated : 23 Feb 2021 03:15 AM

வேளாண் சட்டங்களால் விவசாயம் அழியும் காங். தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கேரள மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதி வயநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது, திரிகைபட்டா முதல் முட்டில் வரை நடைபெற்ற பேரணியில் டிராக்டர் ஓட்டி சென்றார். படம்: பிடிஐ

திருவனந்தபுரம்: கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி நேற்று தனது தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக 6 கி.மீ. தொலைவுக்கு டிராக்டர் ஓட்டிச் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் ராகுல் காந்தி பேசியதாவது:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் மத்திய அரசுக்கு விவசாயிகளின் வேதனை புரியவில்லை. புதிய வேளாண் சட்டங்களால் நாட்டின் விவசாயம் அழியும். சுமார் ரூ.40 லட்சம் கோடி அளவுக்கு வேளாண் வணிகம் நடைபெறுகிறது. ஆனால் ஒட்டுமொத்த வேளாண் வணிகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி தனது நண்பர்களுக்கு தாரை வார்க்க விரும்புகிறார்.

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி எதிர்மறையாக விமர்சனம் செய்தார். ஆனால் அந்த வேலைவாய்ப்பு திட்டம்தான் கரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு கைகொடுத்தது. திட்டத்தை விமர்சித்த பிரதமர் மோடி, அதே திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கினார். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x