Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 44 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹரியாணா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, விவசாயிகள் போராட்டத்தால் ஹரியாணா அரசியலில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து பிரதமரிடம் துஷ்யந்த் எடுத்துரைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கூட்டணியில் துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகுமாறு ஜனநாயக ஜனதா கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் ஹரியாணாவில் ஆளும் கூட்டணியில் பிளவு ஏற்படக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சூழ்நிலையில் துஷ்யந்த் சவுதாலா பிரதமரை சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT