Published : 12 Jan 2021 03:13 AM
Last Updated : 12 Jan 2021 03:13 AM

ஒரே நாளில் 2.73 லட்சம் பேர் உள்நாட்டு விமானங்களில் பயணம்

புதுடெல்லி : கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டது. பிறகு மே மாத இறுதியில் உள்நாட்டுப் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

இந்நிலையில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவில், “உள்நாட்டு விமான சேவை கடந்த மே 25-ம் தேதி மீண்டும் தொடங்கிய பிறகு புதிய உச்சமாக ஞாயிற்றுக்கிழமை 2,179 விமான சேவைகள் மூலம் 2,73,845 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது நம்மை கரோனா பாதிப்புக்கு முந்தைய எண்ணிக்கைக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றுள்ளது. செயல்திறன், பாதுகாப்பு போன்ற அம்சங்கள் காரணமாக பயணிகளால் மிகவும் விரும்பப்படும் சேவையாக உள்நாட்டு விமானப் போக்குவரத்து மாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.

உள்நாட்டு விமானப் பயணிகள் எண்ணிக்கை இதற்கு முன்சாதனை அளவாக கடந்த டிசம்பர்1-ம் தேதி 2,52,374 ஆக பதிவானது. அப்போது ஹர்தீப் சிங் புரி வெளியிட்ட பதிவில், “நமது விமான நிலையங்களும் விமான வழித்தடங்களும் மீண்டும் பிஸியாக உள்ளன. உள்நாட்டுப் பயணிகள் எண்ணிக்கை 2 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தஆண்டு இறுதிக்குள் கரோனாவுக்கு முந்தைய எண்ணிக்கைக்கு திரும்புவோம் என நம்புகிறேன்” என கூறியிருந்தார்.

இதனிடையே சிவில் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் பிரதீப் சிங் கரோலா அண்மையில் கூறும்போது, “உள்நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து துறையில் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட கடின காலம் முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. இத்துறை இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் 2-3 மாதங்கள் ஆகும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x