Published : 17 Nov 2021 03:06 AM
Last Updated : 17 Nov 2021 03:06 AM

மழை, வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த - குறுவை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு : ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்புசாலைகள், வடிகால்களை சரிசெய்ய ரூ.300 கோடி நிதி

மழை, வெள்ளத்தால் முழுமையாக சேதமடைந்த குறுவை பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட சாலைகள், வடிகால்கள், இதர கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய ரூ.300 கோடி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவமழையால் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கன்னியாகுமரியிலும் மிக அதிக அளவில் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், வடிகால்கள், இதர உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கான பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், டெல்டா மாவட்டங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் குறித்து ஆய்வு செய்யவும், விவசாயிகளை சந்தித்து அவர்களது கருத்துகளை கேட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் 6 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டார். அமைச்சர்கள் குழுவினர் அடுத்த நாளே தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு, நீரில் மூழ்கிய பயிர்களை பார்வையிட்டனர். பயிர் பாதிப்பு நில வரம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டதுடன், விவசாயிகளை சந்தித்து அவர்களது கருத்துகளையும் கேட்டறிந்தனர்.

டெல்டா மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் கடந்த 13-ம் தேதி கள ஆய்வு நடத்தி, பயிர் சேதங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் 15-ம் தேதி பார்வையிட்டார். இந்நிலையில், பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையை முதல்வரிடம் அமைச்சர்கள் குழு நேற்று சமர்ப்பித்தது.

இதைத் தொடர்ந்து, இந்த அறிக்கை மீதான ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். விரிவான ஆலோசனைக்கு பிறகு முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

l அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை, கார், சொர்ணவாரி பயிர்கள் முழுமையாக சேதமடைந்திருந்தால் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடாக வழங்கப் படும்.

ரூ.6,038 மதிப்பில் இடுபொருட்கள்

l நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறுசாகுபடி செய்ய ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு ஹெக்டேருக்கு ரூ.6,038 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப் படும். அதாவது, மறுசாகுபடிக்காக ரூ.1,485 மதிப்பில் 45 கிலோ குறுகியகால விதை நெல், பாதிக்கப்பட்ட பயிர்களில் மஞ்சள் நோயை தடுக்க ரூ.1,235 மதிப்பில் 25 கிலோ நுண்ணூட்ட உரம், தழைச் சத்துக்காக ரூ.354 மதிப்பில் 60 கிலோ யூரியா, தழைச் சத்து, மணிச் சத்துக்காக ரூ.2,964 மதிப்பில் 125 கிலோ டிஏபி உரம் ஆகியவை வழங்கப்படும்.

l மழை, வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிக் கப்பட்ட சாலைகள், வடிகால் கள், இதர கட்டமைப்பு வசதிகளை சரிசெய்ய ரூ.300 கோடி வழங்கப்படும்.

இவ்வாறு முதல்வர் அறிவித் துள்ளார்.

இந்த கூட்டத்தில், குழுத் தலை வரான அமைச்சர் ஐ.பெரியசாமி, குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரியகருப்பன், சக்கரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோரும், வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, நிதித்துறை செயலர் முருகானந்தம், வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த், வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குநர் அண்ணா துரை, பேரிடர் மேலாண்மை இயக்கு னர் சுப்பையன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, டெல்டா மாவட்டங்களில் பயிர் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட நிலையில், 68,652 ஹெக்டேர் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியது முதல்கட்ட கணக்கெடுப்பில் தெரியவந்ததாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x