Last Updated : 02 Nov, 2021 03:08 AM

 

Published : 02 Nov 2021 03:08 AM
Last Updated : 02 Nov 2021 03:08 AM

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு சட்டம் ரத்து : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை

வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய அவசர சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை அமலில் உள்ளது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இப்பிரிவுக்குள் வரும் வன்னியர்களுக்கு10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்யக் கோரி மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் 35 வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கு மனுக்களில், ‘தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கியது சட்டவிரோதம். முந்தைய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல், சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வாக்குக்காக வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியது. எனவே, அந்த அவசரச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்’ என கோரப் பட்டிருந்தது.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தன.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயன் ஆஜராகி, ‘‘தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 68 வகுப்புகளை கொண்ட சீர்மரபினருக்கு 7.5 சதவீதம், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதே பிரிவில் உள்ள பிற 22 வகுப்பினருக்கு வெறும் 2.5 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே கிடைக்கும். இதனால், மற்ற வகுப்பினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது’’ என வாதிட்டார்.

அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிடும்போது, ‘‘தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் 1983-ல் நடத்திய கணக்கெடுப்பில் தமிழக மொத்த மக்கள்தொகையில் 13.01 சதவீதம் பேர் வன்னியர்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையிலேய உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுகின்றன. ஏற்கெனவே அமலில் உள்ள இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்க மாநில சட்டப்பேரவை முடிவெடுக்க முடியுமா? சாதி வாரியாக எந்த கணக்கெடுப்பும் இல்லாமல் இது போன்ற உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா? எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு பிரிவுக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியுமா என பல கேள்விகள் உள்ளன.

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தாமல் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் ஒரு வகுப்புக்கு மட்டும் உள் இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய அவசரச் சட்டம் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, ‘‘இந்த சட்டத்தின்கீழ் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது’’ என நீதிபதிகளிடம் அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது. அதற்கு, மேல்முறையீடு செய்து உரிய பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x