கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு - தாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  -  தாமதமின்றி நிவாரணம் வழங்க வேண்டும் :  மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
Updated on
1 min read

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடந்த 16-ம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தேனி, தென்காசி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சராசரி மழை அளவைவிட அதிகனமழை பெய்துள்ளது. கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாகநேற்று நடைபெற்றது. அதில், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

கன்னியாகுமரி உள்ளிட்ட சிலமாவட்டங்களில் 20-ம் தேதி வரை பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்தெரிவித்துள்ளது. எனவே மாவட்டஆட்சியர்கள், அடுத்துவரும் மழைகாலத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இக்கூட்டத்தில், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, வருவாய்நிர்வாக ஆணையர் க.பணீந்திர ரெட்டி, பொதுத் துறை செயலர் டி.ஜகந்நாதன், காணொலிக் காட்சி வாயிலாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், தென்காசி மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ், திருநெல்வேலி மாவட்டஆட்சியர்வே.விஷ்ணு, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in